தொழில்நுட்பம்
ரூ. 398 விலையில் பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கிய சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை விளம்பர நோக்கில் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 9 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சலுகை மேலும் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது.
அதன்படி பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஜூலை 8 வரை வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு பிஎஸ்என்எல் சென்னை வட்டாரத்துக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகை பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை பிரீமியம் எண்கள், ஐஎன் எண்கள், சர்வதேச எண்களுக்கு பொருந்தாது.