செய்திகள்
மேக்நாத் தேசாய்

பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்து 49 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மேக்நாத் தேசாய் -காரணம் என்ன?

Published On 2020-11-21 04:38 GMT   |   Update On 2020-11-21 04:38 GMT
இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரான மேக்நாத் தேசாய், பிரிட்டன் தொழிலாளர் கட்சியில் இருந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகு விலகினார்.
லண்டன்:

பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கியவர் மேக்நாத் தேசாய் (வயது 80). இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான மேக்நாத் தேசாய், பிரபுக்கள் சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார். 

இந்நிலையில், மேக்நாத் தேசாய், தொழிலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் தலைதூக்கிய இனவெறியை தடுப்பதில் கட்சி தலைமை தோல்வி அடைந்துவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கட்சி தலைமை கேட்டுக்கொண்டது. எனினும், அவர் பிரபுக்கள் சபை தொழிலாளர் கட்சி தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். 

இதுபற்றி மேக்நாத் தேசாய் கூறுகையில், ‘இதுவரை தொழிலாளர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமே இருந்தேன். ஆனால், கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் 19 நாட்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனால் 49 ஆண்டுகளுக்கு பிறகு நான் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எந்த மன்னிப்பும் இல்லாமல் அவரை திரும்ப கட்சியில் அனுமதித்தது மிகவும் விசித்திரமான முடிவு. கட்சியில் இனவெறி  புகுத்தப்பட்டது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. யூத எம்.பி.க்கள் மோசமாக நடத்தப்பட்டனர். பெண் உறுப்பினர்கள் ட்ரோல் செய்யப்பட்டனர்’ என்றார்.
Tags:    

Similar News