செய்திகள்
28ந்தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அறிவிப்பு
ஊத்துக்குளி வட்டாரத்தில் ரங்கசாமி உள்ளிட்ட அலுவலர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் இடமாறுதல் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார். பல்லடம் வட்டாரக்கிளை தலைவர் காந்திராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வேலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் ஊத்துக்குளி வட்டாரத்தில் ரங்கசாமி உள்ளிட்ட அலுவலர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் இடமாறுதல் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாறுதல் பாதிப்புகள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாறுதல் பாதிப்புகள் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் பல்லடம் வட்டாரக் கிளை பொருளாளர் பிரபு சங்கர் நன்றி கூறினார்.