விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யா

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்- ஹர்திக் பாண்ட்யா

Published On 2022-04-15 05:51 GMT   |   Update On 2022-04-15 08:08 GMT
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எனது ஆட்டம் சிறப்பானது என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
புனே:

ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 52 பந்தில் 87 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் மனோகர் 28 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 14 பந்தில் 31 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். குல்தீப்சென், யசுவேந்திர சாஹல் , ரியான் பராக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பட்லர் அதிகபட்சமாக 24 பந்தில் 54 ரன் (8 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 17 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். பெர்குசன், யாஷ் தயாள் தலா 3 விக்கெட்டும் முகமது ‌ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

குஜராத் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

கேப்டன் பதவியை நான் ரசிக்கிறேன். கேப்டனாக இருப்பது வேடிக்கையானது. அது என்னை பொறுப்பேற்கவும், கொடி ஏந்தியவராகவும் இருக்க அனுமதிக்கிறது. குழு ஒருவரையொருவர் சுமக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்.

நான் நீண்ட நேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்த பழக்கம் இல்லை. தற்போது நீண்ட நேரம் ஆடி இருக்கிறேன். என்னால் கணக்கீடு செய்து துணிச்சலான முடிவை சந்திக்க முடிகிறது. கடந்த ஆட்டத்தில் அது சரியாக அமையவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் அதை உறுதி செய்தேன்.

எனது இந்த ஆட்டம் சிறப்பானது அதற்கு கடினமாக உழைத்தேன். எனக்கு வெறும் பிடிப்பு மட்டும் தான் ஏற்பட்டது. மற்றப்படி தீவிரமான காயம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சீனியர் வீரர் முகமது ‌ஷமியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்ட்யா கோபப்பட்டு இருந்தார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணி 6-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

ராஜஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18-ந் தேதி எதிர்கொள்கிறது. 

Tags:    

Similar News