ஆன்மிகம்
1,008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

Published On 2019-11-19 03:57 GMT   |   Update On 2019-11-19 03:57 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவன் கோவில்களில் கார்த்திகை சோம வாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, நேற்று மாலை திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சங்காபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது. அதன் மையத்தில் தங்க பிடிபோட்ட வலம்புரி சங்கு வைக்கப்பட்டு, அனைத்து சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டு, பின்னர் அந்த சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்கபிடிபோட்ட சங்கில் உள்ள புனிதநீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதேபோல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு ஜம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த மாதத்தில் வருகிற மற்ற சோமவாரத்திலும் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் நேற்று இரவு 108 சங்காபிஷேகம் நடந்தது.
Tags:    

Similar News