வழிபாடு
சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-13 04:03 GMT   |   Update On 2022-01-13 04:03 GMT
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் முருகனின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் பூஜை செய்யப்பட்ட சேவல், மயில், வேல் சின்னம் பொறிக்கப்பட்ட கிருத்திகைகொடி ஏற்பட்டப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8 மணி கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். வருகிற 17-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார். இதையடுத்து சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து 18-ந் தேதி அதிகாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு மேல் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறும். இதில், அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். தேரை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆதிவாசிகள் வடம் பிடித்து இழுக்கின்றனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக கோவிலை சுற்றி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

19-ந் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். 20-ந் தேதி மகா தரிசனம் மற்றும் மாலை 4 மணிக்கு கொடி இறக்குதல் நடக்கிறது. 21-ந் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சரவணம்பட்டியில் சிரவணமாபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூசி தேரோட்டத்தையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் மற்றும் உற்சவ மூர்த்தியான வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச விரதம் இருக்க கூடிய பக்தர்கள் காப்பும், மாலையும் அணிந்து கொண்டனர்.
Tags:    

Similar News