செய்திகள்
கோப்புப்படம்

அரசு ஊழியர்கள் 50 சதவீதம் மட்டுமே பணிக்கு வரவேண்டும் - நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை

Published On 2021-04-22 01:18 GMT   |   Update On 2021-04-22 01:18 GMT
புதுவையில் தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:

புதுவையில் தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடைகள், தொழில் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சார்பு செயலாளர் ஜெய்சங்கர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

*அனைத்து குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் வரவேண்டும்.

*சார்பு செயலாளர்கள், அதற்கு இணையானவர்கள், துறைத்தலைவர்கள், அலுவலக தலைவர்கள், இதர நிர்வாக தலைவர்கள் கண்டிப்பாக அலுவலகம் வரவேண்டும்.

*குரூப் பி மற்றும் குரூப் சி அலுவலர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வரவேண்டும்.

*50 சதவீதம் என்பது அத்தியாவசிய தேவை துறைகள், வருவாய்த்துறை மற்றும் கொரோனா சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொருந்தாது.

*அதேபோல் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் 50 சதவீதம் என்பது பொருந்தாது. அவர்கள் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும்.

*இந்த உத்தரவுகள் அனைத்தும் வருகிற 30-ந்தேதி வரையிலோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News