ஆன்மிகம்
பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு பிரசாதம் வழங்கியதை படத்தில் காணலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-03-15 04:32 GMT   |   Update On 2021-03-15 04:32 GMT
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அதன்படி, மாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். அத்துடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை. தற்போது மாத பூஜை மற்றும் திருவிழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். மாத பூஜைக்கு பின் ஏப்ரல் 18-ந் தேதி இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
Tags:    

Similar News