வழிபாடு
சாமிதோப்பு தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு விழா

Published On 2021-12-18 05:49 GMT   |   Update On 2021-12-18 05:49 GMT
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதியில் 19-ந்தேதி நிறைவு நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 17 நாட்கள் அய்யா வைகுண்டசாமி கூறிய அறிவுரைகளை திரு ஏடாக வாசிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

விழாவில் நேற்று அய்யா வைகுண்டசாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை நடை திறந்து திருவிளக்கு ஏற்றுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமிக்கு மலர் அலங்கார பணிவிடை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி தலைமைப்பதி முழுவதும் வாழை மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாண வாசிப்பு நிகழ்ச்சியில் பெண்கள் அய்யா வைகுண்டசாமிக்கு கல்யாண சீர் வரிசையாக இனிப்புகள், பலகாரங்கள், பூக்கள், பழங்கள் அடங்கிய சுருள் தட்டுகளை வழங்கி அருள் பெற்றனர்.

அதைதொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்ன தர்மம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் 19-ந்தேதி நிறைவு நாள் விழாவில் அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கிறது.
Tags:    

Similar News