செய்திகள்

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்ஆப்பிரிக்கா

Published On 2019-03-25 12:56 GMT   |   Update On 2019-03-25 12:56 GMT
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்ஆப்பிரிக்கா. #SAvSL
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

முதலில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறிக்கிட்டது.

அதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபெற்றது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது இலங்கை அணி 17 ஓவரில் 183 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 35 பந்தில் 72 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கோடு இலங்கை களம் இறங்கியது.

இலங்கை அணி 15.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
Tags:    

Similar News