ஆன்மிகம்
திருமலை வராகசாமி கோவிலில் பாலாலயம்
திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது.
திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நேற்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை மகர லக்னத்தில் நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி தம்பதியர், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் பங்கேற்றனர்.
வராகசாமி கோவிலில் ஏற்பாடு செய்த யாகசாலையில் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரருக்கும், சுப்ரபாத சேவை நடக்கும்போது விஷ்வக்சேனருக்கும் பிரதான கும்ப ஆராதனை, அர்ச்சனை நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது. அதைத்தொடர்ந்து பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் பிரதான சாத்துமுறை நடந்தது. வராகசாமி சுப முகூர்த்தத்தில் அர்ச்சகர்கள் பிராணப் பிரதிஷ்டை நிகழ்த்தினர்.
அப்போது ஜவஹர்ரெட்டி கூறுகையில், வராகசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட உள்ளது. அந்தப் பணிகள் முடிவடைய 5 மாதங்கள் ஆகும். அதுவரை வராகசாமியின் மூலமூர்த்தியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது, என்றார்.