செய்திகள்
திமுக-அதிமுக

திமுக- அதிமுக வேட்பாளர்கள் தேர்வு: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது

Published On 2021-09-19 06:05 GMT   |   Update On 2021-09-19 06:05 GMT
காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்களை பட்டியலிட்டு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
சென்னை:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தப்படுகிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் அடுத்த மாதம் 9-ந்தேதி நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்புமனு கடந்த 15-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன.

இதில் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கட்சிக்காரர்களிடம் விருப்ப மனுக்கள் பெற்று அதன் அடிப்படையில் வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளனர்.


காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்களை பட்டியலிட்டு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தி.மு.க. மாவட்டச் செயலாளரிடம் பேசுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்துள்ளது. அந்த குழுவினர்
தி.மு.க.
மாவட்டச் செயலாளரிடம் பேசி வருகின்றனர். இதில் இன்று அல்லது நாளை முடிவு ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூறுகையில், “9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு அதிக இடங்கள் கேட்டு காங்கிரசார் பட்டியல் கொடுத்துள்ளதாகவும், அதை சுமூகமாக பேசி முடித்து இன்று அல்லது நாளைக்குள் உடன்பாடு காண்போம் என்றும் தெரிவித்தனர். தி.மு.க. கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு இடங்கள் விரைவில் ஒதுக்கப்பட்டு விடும்” என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை அந்த கட்சியில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கட்சிகாரர்களிடம் விருப்ப மனு வாங்கினார்கள்.

அதில் வேட்பாளர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் நேற்று வழங்கினார்கள்.

இந்த பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து விரைவில் வெளியிட உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு வருவதால் இன்று அல்லது நாளை முடிவு எட்டப்பட்டு பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News