செய்திகள்
போலீசார் தடியடி

செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி

Published On 2020-03-26 17:21 GMT   |   Update On 2020-03-26 17:21 GMT
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
செங்கல்பட்டு:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போது, பிறரிடமிருந்து ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் தூரம்வரை தள்ளியிருக்க வேண்டும். 5 பேருக்கு மேல் எந்த பொது இடத்திலும் கூடக்கூடாது எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று போலீஸ் தரப்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவசியமற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்ததுடன், கேட்க மறுப்பவர்கள் மீது தடியடி நடத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் இருசக்கர வாகனங்களில் வருவோரை தடுத்து நிறுத்திய போலீசார் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
Tags:    

Similar News