பெண்கள் உலகம்
வேலை செய்யும் இடங்களில், பெண் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்...

Published On 2021-12-24 04:29 GMT   |   Update On 2021-12-24 07:51 GMT
பெண்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில், எதிராளியைத் தாக்க நேர்ந்தாலோ, அதனால், எதிராளிக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ, அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
தங்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு அவசியமானது. அப்படிப் பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய உரிமைகளில் சில:

பராமரிக்கும் உரிமை:

பராமரிப்பு என்பதில் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, ஆரோக்கியம் சார்ந்த அனைத்து அடிப்படை விஷயங்களும் அடங்கும். அதிலும், திருமணமான பெண்களுக்கு கணவர் வீட்டில் இந்த அனைத்து அடிப்படை உரிமைகளும் கட்டாயம் கிடைக்க வேண்டும். பெண்கள் கணவரை விட்டுப் பிரிந்தாலும், வருமானத்திற்கு வேறு வழி இல்லாத போதும், மறுமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்தாலும், அவர்களுக்குக் கணவரிடம் இருந்து பராமரிப்புக்காக ஒரு தொகை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அடிப்படையான இந்த உரிமை குறித்து கட்டாயம் தெரிந்திருப்பது அவசியம். ஆனால், இஸ்லாமியருக்கான திருமண சட்டத்தின்படி இந்த உரிமைகள் சற்று மாறுபடும்.

சமமான வருமான உரிமை:

பணியிடத்தைப் பொறுத்தவரை அனைவரும் சமம் என்பதால், ஊதியமும் சமமாக வழங்கப்பட வேண்டும். இதில், ஆண் பெண் பாகுபாடு காட்டப்படும்போது, பெண்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கலாம்.

வன்கொடுமைக்கு எதிரான உரிமை:

பாலியல் ரீதியான துன்புறுத்தல், அடித்துத் துன்புறுத்துதல் மட்டுமல்ல, கடுமையான வார்த்தைகளால் பேசித் துன்புறுத்துவது கூட வன்கொடுமையில் அடங்கும். பெண்ணுக்கு உடலும், மனதும் பாதிக்கும் வகையில் நடக்கும் அனைத்துமே வன்கொடுமையின் கீழ் வரும். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் புகார் தரும் போது, பாதிப்பு ஏற்படுத்தியவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

பணியிட உரிமை:

வேலை செய்யும் இடங்களில், பெண் பணியாளர்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை உரிமைகளையும் வழங்க வேண்டும். தரமான கழிப்பிட வசதி, பணி செய்ய ஏற்ற சூழல் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவது அந்த நிர்வாகத்தின் கடமை. இரவு நேரத்தில், பெண்களை பணியில் ஈடுபடுத்தும் போது, பணியிடத்திலும், வீடு திரும்பும் வரையும் அவர்களுக்கான பாதுகாப்பை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். விசில் அடிப்பது, கேலி செய்து பாடுவது, தவறாகத் தொடுவது என தெரிந்தால், பெண்கள் தயங்காமல் புகார் செய்யலாம்.

இலவச சட்ட உதவிக்கான உரிமை:

பெண்கள் சட்ட ரீதியாக அணுகத் தயங்கி, தங்களுக்கு எதிராக நடக்கும் பல குற்றங்களை சகித்து கொண்டு வாழ்வதற்குப் பழகிவிடுகின்றனர். ஆனால், பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில், தற்போது இலவச சட்ட ரீதியான உதவி வழங்கப்படுகிறது. இதில், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய, நியாயமான உரிமை கிடைக்க இந்த உதவியை நாடலாம்.

தற்காத்துக் கொள்ளும் உரிமை:

பெண்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில், எதிராளியைத் தாக்க நேர்ந்தாலோ, அதனால், எதிராளிக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ, அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஆபத்து நேரும்போது பிறர் உதவிக்காக காத்திருக்காமல், எந்த வகையான தற்காப்பு யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களை பெண்கள் அறிந்திருக்க வேண்டும்.

Tags:    

Similar News