ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலமும் சென்றனர்
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் மகா தீபத்தன்று கிரிவலம் செல்ல முடியாததால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த 29-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கும், கிரிவலத்திற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
தீபத்திருவிழா முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசயைில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மகா தீபத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாததால் ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் கிரிவலம் சென்றனர்.