உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருகே காளியம்மன் கோவிலில் கையில் 2 கிலோ கற்பூரம் ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை அருகே காளியம்மன் கோவிலில் 2 கிலோ கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூரணி புஷ்கரணி காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழ்புத்தாண்டு மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 18&வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மதிய பூஜையின்போது கோவில் பூசாரி குணசேகரன் தனது கையில் 2 கிலோ கட்டி கற்புரத்தை ஏற்றி வைத்து அம்மனுக்கு பூஜை செய்தார். பின்னர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்களுக்கு அம்மனுக்கு படையலிட்ட சோற்றை பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது சேலை முந்தானையில் படையல் சோற்றை வாங்கி சென்று சாப்பிட்டனர்.
இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் படையல் சாதம் சாப்பிட்ட பெண்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
இந்த விழாவின் போது காளியம்மன் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் உலா வந்தார்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இது பற்றி கிராம மக்கள் கூறும்போது, இந்த காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த கோவில் பூசாரி குணசேகரன் முறைப்படி பூஜை செய்து வருவதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் அம்மன் அருள்வாக்கு கூறுகிறார்.
அவை மிகவும் சரியாக உள்ளதால்அருள்வாக்கு கேட்க வெளியூர் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் கோவில் படைப்பு சாதம் சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது என்றனர்.
இக்கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி இரவு சொரகொளத்தூர் பாஞ்சாலி நாடக மன்றத்தின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் அன்று மிளகாய் யாகம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.