செய்திகள்
என்கவுண்டர் நடந்த பகுதி

அசாம் என்கவுண்டர்- டிஎன்எல்ஏ பயங்கரவாதிகள் 7 பேரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

Published On 2021-05-23 08:25 GMT   |   Update On 2021-05-23 10:49 GMT
அசாம்-நாகலாந்து எல்லையில் உள்ள தான்சிரி பகுதியில் டிஎன்எல்ஏ பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
கவுகாத்தி: 

டிமாசா சுதந்திர நாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுத போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது டிமாசா தேசிய விடுதலை ராணுவம் (டிஎன்எல்ஏ). அசாமின் டிமா ஹசாவோ மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான நாகலாந்தின் சில பகுதிகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தின் நாகலாந்து எல்லையில் உள்ள தான்சிரி பகுதியில் டிஎன்எல்ஏ பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று இரவு அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இன்று அதிகாலையில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், டிஎன்எல்ஏ இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தான்சிரி பகுதியில் கடந்த 19ம் தேதி இளைஞர் ஒருவரை டிஎன்எல்ஏ படையினர் கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News