செய்திகள்
வருமான வரித்துறை

கட்டுமான இயக்குனர்களுக்கு வருமான வரித்துறை சம்மன்

Published On 2020-12-18 09:03 GMT   |   Update On 2020-12-18 09:03 GMT
கட்டுமான நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க, வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு தங்கபெருமாள் வீதியில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், மசாலா பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம், பஸ் போக்குவரத்து போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார் அடிப்படையில் ஈரோடு, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 14-ந் தேதி இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், கஸ்பா பேட்டையில் உள்ள இயக்குனர்கள் வீடு, முள்ளாம்பரப்பில் உள்ள அலுவலகங்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை ஈடுபட்டனர்.

இந்த சோதனை நேற்று 4-வது நாளாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.21 கோடி ரொக்க பணம் சிக்கியது. மேலும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களும் சிக்கியது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஹார்ட் டிஸ்க்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்த நிறுவனங்கள், நபர்களிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தினர் தங்களது பணத்தை ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளது வருமான வரித்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் ரூ.150 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News