செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி

உத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

Published On 2019-08-21 08:03 GMT   |   Update On 2019-08-21 08:03 GMT
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஹெலிகாப்டர் மோல்டியை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹெலிகாப்டரில் பைலட், துணை பைலட் மற்றும் ஒருவர் பயணம் செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர்.

ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தபோது விழுந்திருப்பதால் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மோரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த அடைமழையின்போது, மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 
Tags:    

Similar News