குஜிலியம்பாறை அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே கருங்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி குழந்தைகளை படிக்க வைத்தனர்.
கடந்த சில நாட்களாக குஜிலியம்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. கற்பகவள்ளி வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்த ஆடுகளை மாற்றி கட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த சுவர் ஏற்கனவே பலவீனமாக இருந்துள்ளது. மழை பெய்ததால் திடீரென சரிந்து கற்பகவள்ளியின் மீது விழுந்துள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி அவரை மீட்க முயன்றனர். ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி கற்பகவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.