ஆன்மிகம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2019-10-29 06:47 GMT   |   Update On 2019-10-29 06:47 GMT
அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உற்சவ அம்மனுக்கு சொர்ணகவுரி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். இரவு 11.30 மணிக்கு பம்பைமேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News