செய்திகள்
கோப்பு படம்

மயிலாடுதுறை அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது

Published On 2019-09-14 16:02 GMT   |   Update On 2019-09-14 16:02 GMT
மயிலாடுதுறை அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை. இவருடைய மகன் மாரீஸ்வரன்(வயது26). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவி செல்லும் இடங்களுக்கு பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மாரீஸ்வரன் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து அவருக்கு கட்டாய தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனே சம்பவ இடத்தில் திரண்ட அக்கம்பக்கத்தினர் மாரீஸ்வரனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேணுதேவி மற்றும் போலீசார் மாரீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவிக்கு கொத்தனார் ஒருவர் கட்டாய தாலி கட்டிய சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News