செய்திகள்
அதிரடி காட்டிய ருதுராஜ்-உத்தப்பா ஜோடி

ஐபிஎல் 2021 - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை

Published On 2021-10-10 17:48 GMT   |   Update On 2021-10-11 00:29 GMT
டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
துபாய்:

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ரன்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ரன் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார்.

சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News