ஆன்மிகம்
கோவில் தோற்றம், கருணாசாமி, பெரியநாயகி

கரிகால் சோழனின் நோய் தீர்த்த கருணாசாமி கோவில்

Published On 2020-08-19 02:26 GMT   |   Update On 2020-08-19 02:26 GMT
கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொளள்லாம்.
தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி ‘கருத்திட்டைக்குடி’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது ‘கரந்தட்டான்குடி’ என்றும், ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது.

இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், ‘பெரியநாயகி’, ‘திரிபுரசுந்தரி’ என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது.

பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.

கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது. இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, ‘இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்’ எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது. அன்று முதல் இந்தப் பகுதி ‘கருந்தட்டான்குடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘கரந்தை’ என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.

ஆரூண், பிள்ளையார்பட்டி.
Tags:    

Similar News