செய்திகள்
குடிபோதையில் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு தர்ம அடி
டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் பின்னர் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர்பந்தல் காலனியை சேர்ந்த அருண்குமார் ( வயது28) என்பவர் மோட்டார் சைக்கிளில் கள்ளிபாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் பல்லடம் - தாராபுரம் ரோட்டில் ஆலூத்துப்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது பின்னால் வந்த தனியார் பனியன் கம்பெனி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
இதில் நிலை தடுமாறி அருண்குமார் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வேனை துரத்தினர். சுமார் 5 கிலோமீட்டர் வேனை துரத்தி பல்லடம் பனப்பாளையத்தில் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் வேனின் கதவைத் திறந்த போது ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது . இதையடுத்து டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓட்டுனரை விசாரித்த போது தஞ்சாவூரைச் சேர்ந்த ராகவன்(31) என்பதும் சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஓட்டுனராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.