செய்திகள்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
தொடர் பணி வழங்க வேண்டும் என எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலைவளாகத்தில் நேற்று 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி மற்றும் 94 ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.