செய்திகள்
கட்டாய மதமாற்றம் செய்தால் சிறை- உ.பி.யில் அவசர சட்டத்தை பிரகடனம் செய்தார் ஆளுநர்
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத மதமாற்றத்தை தடை செய்வதுடன், அதை குற்றமாக கருதி தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்து சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார். இதன்மூலம் அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது. அவ்வாறு திருமணம் செய்தவரை, ஜாமீனில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களை கட்டாயமாக மதம் மாற்றினால் ரூ.25,000 அபராதத்துடன் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநில மந்திரி சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார்.