செய்திகள்
கோப்புபடம்

ஈரானில் குடிநீர் தட்டுப்பாட்டால் வன்முறையில் குதித்த மக்கள் - போலீஸ் துப்பாக்கி சூடு

Published On 2021-07-26 13:22 GMT   |   Update On 2021-07-26 13:22 GMT
வன்முறையில் ஈடுபட்டு வரும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஈரான் நாட்டு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெக்ரான்:

ஈரான் நாட்டில் சமீப காலமாக கடும் வெப்பம் நிலவுகிறது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உள்ளது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசாங்கத்தாலும் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை.

எனவே பல இடங்களிலும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்குள்ள தெற்கு குசஸ்டான் பகுதியில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

சிறிது கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபட்டார்கள். சாலைகளுக்கு குறுக்கே மரக்கட்டைகள் மற்றும் டயர்களை போட்டு தீ வைத்தனர்.

போராட்டக்காரர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஈரான் நாட்டு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனாலும் கலவரம் பல இடங்களிலும் பரவி வருகிறது. மக்களை அமைதிப்படுத்த முடியாமல் ஈரான் அரசு தவிக்கிறது.

Tags:    

Similar News