செய்திகள்
விஷம்

ஆன்-லைன் வகுப்புக்கு அக்காள் செல்போன் தராததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை

Published On 2020-11-19 02:00 GMT   |   Update On 2020-11-19 02:00 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஆன்-லைன் வகுப்புக்கு அக்காள் செல்போன் தராததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா முத்தக்காபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 50), டிரைவர். இவருடைய மனைவி திவ்யா (48). இவர்களது மகள்கள் கீர்த்திகா (17), பிரீத்திகா (15), மகன் மணிகண்டன் (11). இவர்களில் கீர்த்திகா பிளஸ்-2 படித்து வருகிறார். பிரீத்திகா எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

கடந்த 15-ந் தேதி சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் திருச்சி காட்டுப்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்தபடி கீர்த்திகாவும், பிரீத்திகாவும் ஆன்-லைன் வகுப்புகளில் படித்து வந்தனர். ஆன்-லைன் வகுப்புக்கு இருவரும் ஒரே செல்போனைத்தான் பயன்படுத்தி வந்தனர். நேற்று முன்தினம் ஆன்-லைன் வகுப்புக்கு கீர்த்திகா தனது தங்கைக்கு செல்போன் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த திவ்யா, தனது இரு மகள்களையும் கண்டித்துள்ளார். அக்காள் செல்போன் தராததாலும், தாயார் திட்டியதாலும் மனமுடைந்த பிரீத்திகா, நேற்று முன்தினம் மாலை உறவினர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
Tags:    

Similar News