ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதான பார்சல்

Published On 2021-03-03 03:52 GMT   |   Update On 2021-03-03 03:52 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மதியம் நேரத்தில் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதி இல்லாததால் அன்னதானம் கோவிலுக்குள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

மேலும் அந்த நேரத்தில் கோவிலுக்கு வெளியே பலர் சாப்பாடு இன்றி தவித்ததை தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு வகையான கலவை சாதங்கள் பார்சலாக கட்டி கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது. தற்போது வரை அந்த வகையான சாதங்கள் காலை நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் அரசு பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுபாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் படி சில தினங்களுக்கு முன்பு அனைத்து வயதுடைய பக்தர்களும் கோவிலுக்குள் நான்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் பூ, பழங்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் கோவிலுக்குள் பக்தர்களுக்கு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்தை மீண்டும் செயல்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் வழக்கம் போல் மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக கட்டி வழங்கப்பட உள்ளது.

அதன்படி சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் கோவிலுக்குள் அன்னதானம் வழங்கப்பட இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News