செய்திகள்
பிரதமர் மோடி

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2020-11-25 18:52 GMT   |   Update On 2020-11-25 18:52 GMT
டெல்லியில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி:

டெல்லியில் தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 10-ந் தேதிவாக்கில் அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது. இன்னும் இறுதி தேதி முடிவு செய்யப்படவில்லை.

முக்கோண வடிவத்தில் அமையும் புதிய பாராளுமன்ற கட்டிடத்துடன், ஒரு பொது மத்திய செயலகம் கட்டவும், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீள ராஜபாதையை மேம்படுத்தவும் புதிய மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், உணவருந்தும் இடம் மற்றும் போதுமான வாகனநிறுத்தப் பகுதி ஆகியவை அமைந்திருக்கும்.

அனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படும். அவை காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாக செயல்படும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள் இருக்கும்.

புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கிறது. கட்டுமானப் பணி 21 மாதங்களில் முடிவடையும் என கருதப்படுகிறது.

புதிய கட்டிட பணியைத் தொடர்ந்து, தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட 5 தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடப் பணி முடிவடைந்ததும், அந்த வளாகத்தில் இந்த சிலைகள் நிறுவப்படும்.
Tags:    

Similar News