சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்- வக்கீல் தகவல்
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 3 வருடம் 8 மாதங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 3 மாத காலம்தான் (ஜனவரி வரை)அவர் சிறையில் இருக்க வேண்டி வரும். ஆனால் நன்னடத்தை காரணமாக அவர் முன்கூட்டியே விடுதலையாகிவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-
கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு இன்றுவரை (27-ந் தேதி) கோர்ட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே நாளை கோர்ட்டில் இருந்து ஏதாவது தகவல் வருமா? என எதிர்பார்க்கிறோம். சசிகலாவுக்கு கோர்ட்டில் இருந்து அபராத தொகையை செலுத்துமாறு தகவல் கிடைத்தால் எனக்கு அதுபற்றி கடிதம் மூலம் தெரிவிப்பார்கள்.
அதன் மூலம் நாங்கள் உடனடியாக கோர்ட்டில் பணத்தை செலுத்த ஏற்பாடு செய்வோம். எனவே நாளை அல்லது நாளை மறுநாள் முக்கிய தகவல் சசிகலாவிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம்.
சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.