கோவையில் வீடு கட்டி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி- 4 பேர் மீது வழக்கு
சிங்காநல்லூர்:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள போலவம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மகள் தானவி (வயது32). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி ரோட்டில் உள்ள ஒரு வீடு கட்டி கொடுக்கும் தனியார் நிறுவனத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு சொந்தமாக வீடு கட்ட ஆசை உள்ளதாக கூறினேன். அங்கிருந்த அபி மன்னன், தமிழரசி, சிந்து, புரோஸ்கான் ஆகியோர் உங்களுக்கு தேவையான வீட்டை நாங்களே கட்டி தருகிறோம். முதலில் நீங்கள் ரூ.12 லட்சம் தாருங்கள் என்று கூறினர்.
இதையடுத்து நானும் பணத்தை கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை தரவில்லை. இதனால் நான் அங்கு சென்று கேட்டேன். அதற்கு அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து வந்தனர். இதுவரை கேட்டும் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அபிமன்னன், தமிழரசி, சிந்து, புரோஸ்கான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.