செய்திகள்
சீரடி சாய் பாபா

ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...பிறவிப்பிணி தீர்க்கும் உதி

Published On 2021-10-23 12:12 GMT   |   Update On 2021-10-23 12:12 GMT
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு முதலில் உதி வழங்க மாட்டார். பக்தர்கள் வீடு திரும்ப அனுமதி கேட்கும் போது, ‘‘உதி கொண்டு வா’’ என்று குரல் கொடுப்பார்.
சீரடிக்கு செல்லும் பக்தர்கள் இரண்டு விஷயங்களை தவறாமல் பெற்று வர வேண்டும். ஒன்று சாய்பாபாவின் கருணைப்பார்வை கலந்த ஆசீர்வாதம். அடுத்தது பாபா தரும் உதி.

சீரடிக்கு சாய்பாபாவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பக்தனும் போகவும் முடியாது. அவர் அனுமதி இல்லாமல் திரும்பி வரவும் முடியாது. இது சீரடி தலத்தில் அவர் என்றைய தினம் அருள்பாலிக்கத் தொடங்கினாரோ அன்று முதல் இன்று வரை அற்புதமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

சாய்பாபா வாழ்ந்த காலத்தில் தன்னை தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு முதலில் உதி வழங்க மாட்டார். பக்தர்கள் வீடு திரும்ப அனுமதி கேட்கும் போது, ‘‘உதி கொண்டு வா’’ என்று குரல் கொடுப்பார். அப்படி அவர் சொன்னாலே அந்த பக்தருக்கு பாபா வீடு திரும்ப அனுமதி கொடுத்துவிட்டார் என்று அர்த்தமாகும்.

உதியை கொடுக்கும் போது பக்தர்களின் தலை மீது கை வைத்து அதே சமயம் அவர்களது நெற்றியில் தனது கட்டை விரலால் உதியை எடுத்து பாபா பூசிவிடுவார். அப்போது ஆசீர்வாதமும் வழங்குவார். அப்படி அவர் கையால் உதி பெற்றவர்களுக்கு வாழ்வில் மேன்மைகள் ஏற்பட்டது. இத்தகைய நிகழ்வில் இருந்துதான் எதை செய்வதாக இருந்தாலும் பாபாவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற பழக்கம் தோன்றியது.

பாபாவின் அனுமதியைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, அந்த செயல் சிறப்படைய வேண்டுமானால் அவரால் உருவாக்கப்பட்ட உதி பிரசாதம் கண்டிப்பாக வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் சாய் பக்தர்கள் வீட்டில் எதுவும் நடக்காது.

சாய்பாபா சீரடியில் உள்ள துவாரகமயி மசூதியில் குடியேறிய பிறகு ஒரு நாள் தரையை தட்டி நெருப்பை வரவழைத்தார். அன்று முதல் அந்த தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. அதில்போடப்படும் தேங்காய் மற்றும் சமித்துகள் மூலம் பெறப்படும் சாம்பலை சாய்பாபா ஆசீர்வாதம் செய்து உதியாக கொடுக்கத் தொடங்கினார். அந்த உதியை நம்பிக்கையுடன் பெறும் பக்தர்களுக்கு வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகிடும்.

அதிகாலையில் நீராடிவிட்டு வந்த பிறகு பாபா படம் முன்பு நின்று மனமுருக வழிபட்டு அவர் தந்த உதியை நெற்றியில் பூசிக் கொண்டால் புண்ணியமான வாழ்வை பெறலாம் என்பது ஐதீகம் ஆகும். ஆனால் சிலர் பாபா ஆலயங்களில் தரப்படும் உதியை சாதாரணமாக விபூதிதானே என்று நினைக்கிறார்கள். ஆனால் உதியில் பாபாவே கலந்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.
அவர் இல்லாத இடங்களில் அவர் தந்த உதி மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியது என்பதற்கு எத்தனையோ வரலாற்று சம்பவங்கள் பல்வேறு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரேயொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.

சாய்பாபாவுக்கு மிக மிக நெருக்கமாக இருந்த பக்தர்களில் நானா சந்தோர்கர் என்பவரும் ஒருவர். இவரது மகள் பிரசவ நேரத்தில் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். பல மைல் தொலைவில் சீரடியில் இருந்த பாபாவுக்கு இது தெரிய வந்தது. உடனடியாக அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி தன் கைப்படக் கொடுத்த உதியை நானாவிடம் சேர்க்க வைத்தார். அந்த உதியை தண்ணீரில் கலந்து குடித்த அடுத்த நிமிடமே நானா மகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டது.

இதேபோன்றுதான் ஷாமா என்று பாபாவுக்கு மிக நெருக்கமான மற்றொரு பக்தர் இருந்தார். அவர் தனது வீட்டில் பாபா படம் அருகே பாபா தந்த உதியை மிகப்பெரிய பொட்டலமாக வைத்து வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் தனது வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்யுமாறு பணியாட்களிடம் சொல்லிவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.

அவர் வீட்டை சுத்தம் செய்த பணியாளர்கள், பாபா படம் முன்பு இருந்த  உதி பொட்டலத்தை ஏதோ தேவையற்ற பொருள் என்று நினைத்துக் கொண்டு அகற்றிவிட்டனர். அதை குப்பையுடன் குப்பையாக சேர்த்து தெருமுனையில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். அன்று இரவு மும்பையில் தூங்கிக் கொண்டு இருந்த ஷாமாவின் கனவில் பாபா தோன்றி பேசினார்.
‘‘நான் உனக்கு ஆசீர்வாதம் செய்து உதி தந்தேன். அந்த உதியை உன் வீட்டில் உள்ளவர்கள் இன்று எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டனர். அது குப்பைத் தொட்டிக்குள் இருக்கிறது. நீ உடனடியாக வந்து அதை எடுத்து என் படத்திற்கு அருகில் வை’’ என்று பாபா கூறினார். இதைக் கேட்டதும் ஷாமாவுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

மறுநாளே அவர் மும்பையில் இருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு வந்தார். பாபா படம் முன்பு வைத்திருந்த உதி பொட்டலத்தைத் தேடினார். அது அங்கு இல்லை. உடனே தெருமுனையில் இருந்த குப்பைத் தொட்டிக்கு ஓடினார். அங்கு அந்த உதி பொட்டலம் கிடந்தது. அதை எடுத்து வந்து மீண்டும் பாபா படம் முன்பு வைத்து வழிபட்டார். பாபா உதியோடு எந்த அளவுக்கு கலந்து இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் சரியான உதாரணம் ஆகும்.

துவாரகமயி மசூதியில் இருக்கும் போது சில சமயம் சாய்பாபா ராகம் போட்டு ஒரு பாடலை பாடுவார். ‘‘ஓ.... விளையாட்டு ராமா... வாரும் வாரும்... உங்களுடன் உதி மூட்டைகளை கொண்டு வாரும் வாரும்...’’ என்று ஆனந்தமாக பாடுவார். அப்படி அவர் பாடிய பிறகு தன் கைப்பட எடுத்து கொடுக்கும் உதிக்கு சர்வ சக்திகளும் இருந்தது. அந்த உதியை பயன்படுத்தியவர்கள் ஆரோக்கியம் பெற்றனர். அந்த உதி இருந்த வீடுகளில் சுபீட்சமும்,  செல்வங்களும் தாண்டவம் ஆடியது, கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்தது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பாபாவின் உதியை நம்பிக்கையோடு யார் ஒருவர் பயன்படுத்துகிறாரோ அவருக்கு தற்போதைய வாழ்வின் லௌகீக லட்சியங்களை எல்லாம் எட்ட முடிந்தது. அதுமட்டுமல்ல பாபாவின் உதியில் இன்னொரு மிக முக்கியமான பலன் பொதிந்து கிடப்பது பெரும்பாலான பாபா பக்தர்கள் இன்னும் உணராமலேயே இருக்கிறார்கள்.
பாபா ஆலயங்களில் தரப்படும் உதியை யார் ஒருவர் தவறாமல் நெற்றியில் ஆத்ம ஞானத்தை உணர்ந்து பூசிக்கொள்கிறாரோ அவர்களுக்கு பிறவிப்பிணி தொலைந்து போகும் என்று பாபாவே அடிக்கடி தனது பக்தர்களிடம் சொல்வது உண்டு. இது பற்றி ஒரு பக்தர் பாபாவிடம் கேட்டபோது, ‘‘என்னிடம் இருந்து பெறப்படும் உதியை பக்தர்கள் தங்கள் நிலையை உணர்ந்து பூசிக் கொண்டால் பற்றற்ற நிலையை எட்ட முடியும். இது விவேகத்தால் மட்டுமே முடியும்’’ என்று பதில் அளித்தார். உதியின் மிக உயர்ந்த தத்துவமாக இது கருதப்படுகிறது.

பொதுவாக விபூதியை பூசுவதற்கு ஒரு தத்துவத்தை சொல்கிறார்கள். மனிதன் இறந்த பிறகு சாம்பலாகிப் போவான். அதை உணர்த்தும் வகையில் விபூதி உள்ளது என்பார்கள். ஆனால்  பாபாவின் உதியானது இந்த தத்து வத்தையும் கடந்து மேன்மை கொண்டதாக இருக்கிறது.  அதனால்தான் பாபா தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு உதி பிரசாதத்தை அள்ளி அள்ளி கொடுத்தார்.
சில பக்தர்களிடம், ‘‘இங்குள்ள உதி உனக்கு எல்லாம் தரும். தேவையான அளவுக்கு குறைவின்றி எடுத்து செல்’’ என்று சொல்வார். அதுவும் குதூகலமான மனநிலையில் இருக்கும் போது, ‘‘ராமா உதி கொண்டு வா’’ என்று புன்னகை ததும்ப சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த சமயத்தில் அவர் கையில் இருந்து வரும் உதிக்கு மகத்தான சக்திகள் இருந்தன.

இதனால்தான் பாபாவின் உதி பிரசாதம் நாடு முழுவதும் பரவியது. பாபா மறைந்த பிறகு அவரது படங்களில் இருந்து உதி விழுவதாக பல இடங்களில் தகவல் வெளியானது. இன்றும் கூட பாபா பக்தர்களின் வீடுகளில் தானாக உதி வரும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உதி பிரசாதத்தின் மகிமை அபாரமானது.   ஏனெனில் பாபா ஆலயங்களில் உருவாகும் ஒவ்வொரு துளி உதியிலும் பாபா கலந்து இருக்கிறார். இந்த அற்புதத்தை சீரடிக்கு வந்த சில தினங்களிலேயே அவர் செய்துவிட்டார். துவாரகமயியில் உள்ள துனீ முன்பு அமர்ந்து பாபா தன்னிலை மறந்து கண்ணை மூடிக்கொண்டு மணிக் கணக்கில் தியானத்தில் இருப்பார். அதன் பிறகு துனீயில் இருந்து உதியை சேகரித்து கொடுப்பார்.

இப்படி பாபாவின் நேரடி பார்வையால் மகிமை பெற்ற உதிக்கு எல்லா வித ஊழ்வினைகளையும் போக்கும் சக்தி இருக்கிறது. உடல் நோய்கள்,  மன நோய்கள் அத்தனையையும் குறைக்கும் ஆற்றல் உதி பிரசாதத்திற்கு இருப்பதாக சாய் பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

உதியின் சிறப்பை சாய் பக்தர்கள் காலம் காலமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சத்சரிதம் நூலில் இரண்டு அத்தியாயங்களில் உதியின் சிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. பஞ்ச பூதங்களால் உருவான நமது உடல் இம்மை வாழ்வில் எல்லா வித இன்ப& துன்பங்களை அனுபவித்த பிறகு கடைசியில் சாம்பலாகவே முடியும். இந்த உண்மையை பக்தர்கள் மறக்கக் கூடாது என்பதற்காகவே உதியில் அபார சக்திகளை பாபா கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பாபா தந்த உதியை நாம் ஒவ்வொரு முறை நெற்றியில் பூசிக் கொள்ளும் போது, ‘‘எதுவும் நிரந்தரம் இல்லை’’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உலக வாழ்க்கை மீது அதிக ஆசைப்படக் கூடாது.  பாபாவின் உதி இந்த உள் அர்த்தத்தை பொதிந்து கொண்டு இருப்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.  

உதியை பூசிக்கொள்ளுங்கள் என்று  பாபா நிறைய பக்தர்களுக்கு கனவில் காட்சி கொடுத்து அறிவுறுத்தி உள்ளார். உடல் நலம் இல்லாதவர்களுக்கு அவர் கனவில் தோன்றும் போதெல்லாம் உதி பூசிவிட்ட அற்புதங்களும் நடந்துள்ளன. இவற்றின் மூலம் பாபாவும், உதியும் வேறு வேறு அல்ல என்பதை ஒவ்வொரு சாய் பக்தனும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாபா காட்டிய பாதைகளில் உதியை தினமும் தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்ற பாதையும் முக்கியமானது. பாபாவிடம் ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படும் பக்தர்கள் முதலில் அவர் கொடுத்த உதியை ஆத்மார்த்தமாக பூசிக் கொள்ள வேண்டும்.

உதி பிரசாதத்தை பொக்கிஷமாக நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் பக்தர்களின் வீட்டில் பாபா குடியிருக்கிறார் என்பதே உண்மை. பாபா காட்டிய இந்த பாதையை இன்றே கடைபிடிக்க வேண்டுமானால் உடனே உதி பொட்டலத்தை கையில் எடுங்கள்.

பாபாவின் உதி பிரசாதத்திற்கு எந்த அளவுக்கு மகிமை இருக்கிறதோ அதே அளவுக்கு அவர் காட்டிய..... பாதைக்கும் மகிமை இருக்கிறது.
Tags:    

Similar News