இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு- நாமல் ராஜபக்சே ஒப்புதல்
கொழும்பு:
இலங்கையில் அதிபராக கோத்பய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் உள்ளனர். அதேபோல் அமைச்சர்களாக பசில் ராஜபக்சே மற்றும் நாமல் ராஜபக்சே உள்ளனர்.
அந்நாட்டு அரசாங்கத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் கைஓங்கி இருக்கிறது. இந்த நிலையில் ராஜபக்சே குடும்பத்துக்கு மக்களிடம் செல்வாக்கு சரிவு ஏற்பட்டு உள்ளது என்று விளையாட்டு துறை அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எந்த அரசியல்வாதிக்கும் மக்களின் செல்வாக்கு எல்லா காலங்களிலும் உச்சத்திலேயே இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலைவர்களின் மக்கள் செல்வாக்கு குறையும் தன்மையுடையது. ராஜபக்சேகள் எப்போதும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட அரசியலில் ஈடுபட்டவர்கள்.
ஆனால் திடீரென்று ரசாயன உர பயன்பாட்டை ரத்து செய்த தீர்மானம், மக்களின் ஆதரவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜபக்சேக்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன். இது தற்காலிகமானது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... புதிய மருத்துவ கல்லூரி திட்டம் தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது- அமைச்சர் பேட்டி