ஆட்டோமொபைல்
சாகசப் பயணத்துக்கேற்ற சுசுகி டி.ஆர். இசட்50
சுசுகி நிறுவனத்தின் புதிய டி.ஆர். இசட்50 மோட்டார்சைக்கிளின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. #Suzuki
சுசுகி நிறுவனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான வாகனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டிலேயே 3 மோட்டார்சைக்கிள்ளை காட்சிப்படுத்தியிருந்தது.
இவற்றில் முதலாவது மாடலாக டி.ஆர். இசட்50 இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் 50 சி.சி. பிரிவில் அறிமுகமாகி இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கரடு, முரடான சாலைகளில் பயணிப்பதற்கேற்ப இதன் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெறுமனே சாகசப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் முகப்பு விளக்கு கிடையாது. இதனால் இதை சாதாரண சாலைகளில் இரவில் பயன்படுத்த முடியாது.
இந்த மோட்டார்சைக்கிளில் 49 சி.சி. திறனுடன் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 3 கியர்களுடன் ஆட்டோமேடிக் கிளட்ச் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த சி.சி. திறன் கொண்டிருக்கும் டி.ஆர். இசட் 50 மாடலில் டிரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சிறியவர்களும் ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் எடையும் 58 கிலோவாக உள்ளது. பெட்ரோல் டேங்க் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. வண்ணங்களை தேர்வு செய்ய வாய்ப்பு தராமல் ஒரே மஞ்சள் நிறத்தில் மட்டுமே இந்த மோட்டார்சைக்கிளை சுசுகி அறிமுகம் செய்துள்ளது.