செய்திகள்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். முதல் ஓவரிலேயே வார்னர் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் தத்தளித்தது.
அதன்பின் வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ரன்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.