செய்திகள்
மதுரை ஐகோர்ட்

நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-01-13 08:01 GMT   |   Update On 2020-01-13 14:19 GMT
அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி உட்பட பலர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும்.

எனவே அவனியாபுரத்தில் கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.



இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் வழக்கை விசாரித்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவிட்டனர்.

மதுரை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து நடத்த உத்தரவிட்டனர்.

இதேபோல அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை மாவட்ட கலெக்டர், தென்மண்டல காவல்துறை தலைவர், ஊராட்சி மன்ற உதவி இயக்குநர் கண்காணிப்பின் கீழ் விழாக்கமிட்டியினர் நடத்தவும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News