ஆன்மிகம்
அம்மன் கோவில்களில் தசரா விழா கால்நாட்டுடன் தொடங்கியது

அம்மன் கோவில்களில் தசரா விழா கால்நாட்டுடன் தொடங்கியது

Published On 2020-10-07 09:06 GMT   |   Update On 2020-10-07 09:06 GMT
பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற 11 அம்மன் கோவிலிலும் ஒரே நேரத்தில் திருகால் நாட்டப்பட்டு தசரா திருவிழாவின் பிரதான பூஜைகள் தொடங்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் தசரா விழா விமரிசையாக நடைபெறும். அன்னை பராசக்தி மகிஷாசூரனை வதம் செய்ய 9 நாட்கள் கொலுவில் இருந்து 10-வது நாளான விஜயதசமி அன்று மகிஷாசூரமர்த்தினியாக அவதாரமெடுத்து சம்ஹாரம் செய்யும் நிகழ்வான தசரா திருவிழா, ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தசரா விழா வரும் 17-ந் தேதி தொடங்க இருக்கிறது.

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 11 அம்மன் கோவில்களில் உள்ள 11 சப்பரங்களில் அம்மன் வீதி உலா வந்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நேற்று கால் நாட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள பிரதான அம்மன் கோவிலான ஆயிரத்தம்மன் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வீதி உலா நடைபெறும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை பக்தர்கள் சுற்றிவந்து கோவில் முன்பு கால்நாட்டப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற 11 அம்மன் கோவிலிலும் ஒரே நேரத்தில் திருகால் நாட்டப்பட்டு தசரா திருவிழாவின் பிரதான பூஜைகள் தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் கொண்டாடப்படும் தசரா விழாவில் பாளையங்கோட்டையில் உள்ள 11 அம்மன் கோவிலில் இருந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வீதி உலா கொண்டு வரப்பட்டு சமாதானபுரத்தில் உள்ள மைதானத்தில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வீதி உலாவிற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு சம்ஹார நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என அறநிலைய துறை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்ஹார நிகழ்ச்சியின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News