செய்திகள்
கர்ப்பிணி பெண் சூரியா

திருவெண்ணைநல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி பெண் மர்மமரணம்

Published On 2019-12-04 07:59 GMT   |   Update On 2019-12-04 07:59 GMT
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி பெண் அடித்து தூக்கில் தொங்கவிட்டதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்பாபு(வயது 28). இவருக்கும், அருகில் உள்ள தொட்டிமேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சூரியா(20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணேஷ்பாபு புதுவையில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். தற்போது சூரியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு மனைவி சூரியாவை தாக்கினார். இதில் சூரியா மனவேதனை அடைந்தார். இந்தநிலையில் சூரியா வீட்டில் தூக்கில் தொங்குவதாக போனில் கணேஷ்பாபு தனது மாமனார் பாலகிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் தூக்கில் தொங்கிய சூரியாவை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் சூரியா இறந்து விட்டதாக கூறினர்.

இதைகேட்டதும் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் பாலகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மகள் சூரியாவை கணேஷ்பாபு மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகியோர் அடித்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். அவரது சாவில் மர்மம் உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் விசாரணை நடத்தி கணேஷ்பாபு அவரது தாய் லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

5 மாத கர்ப்பிணி பெண் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News