உள்ளூர் செய்திகள்
துணை தாசில்தாரின் தந்தை மர்ம மரணம்
திருச்சி அருகே காயங்களுடன் பிணமாக கிடந்த துணை தாசில்தாரின் தந்தை கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 63). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் நாகமநாயக்கன்பட்டியில் உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை சுப்பையா, வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு உடலை இங்கு வந்து வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி பார்வையிட்டார். அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மர்மமான முறையில் இறந்து கிடந்த சுப்பையாவின் மகன் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.