ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி: அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2021-10-18 06:48 GMT   |   Update On 2021-10-18 06:48 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவில் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்பட விசேஷ நாட்களில் பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் மற்ற நாட்களை விட விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தொற்று பரவல் காரணமாக கடந்த ஆகஸ்டு மாத இறுதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் பலர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடலாம் என்று அறிவித்தது.

அதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இலவச, கட்டண தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் பலர் கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி தனித்தனியாக கிரிவலம் சென்றனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News