செய்திகள்
நாராயணசாமி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்- நாராயணசாமி உறுதி

Published On 2021-01-13 13:22 GMT   |   Update On 2021-01-13 13:22 GMT
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வரவேற்றுப் பேசினார்.

விவசாயிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலையை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. தற்போது டெல்லியில் 2 கோடி விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த சட்டங்களை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க கோரியுள்ளது.

புதுவை மாநிலத்தில் நாங்கள் தொடர்ந்து விவசாயி களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கோப்புக்குத்தான் கையெழுத்து போட்டேன். ஆனால் மத்திய அரசு இப்போது மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து தருவோம்.

மத்திய அரசு இப்போதுதான் பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் நாம் ஏற்கனவே அதை கொண்டுவந்து விட்டோம். இதற்காக ரூ.6 கோடி காப்பீட்டு தொகையும் செலுத்தி உள்ளோம். விவசாய பயிர்களான நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளி, மணிலா என அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் நேரடி மானியம் வழங்கி வருகிறோம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. ஆனால் நாம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்குகிறோம். பட்ஜெட்டில் 31 பக்கங்கள் விவசாயத்துக்காகத்தான் ஒதுக்கியுள்ளோம். வங்கிகளுடன் இணைந்து ரூ.3 ஆயிரத்து 100 கோடிக்கு விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.

புதுவையில் வீசிய புயல்களால் கனமழை பெய்தது. இதனால் ரூ.400 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கவேண்டும் என்று நான் கடிதம் எழுதினேன். ஆனால் கவர்னர் கிரண்பெடி இங்கு சேதம் ஏற்படவில்லை என்கிறார். புதுவை மாநிலத்தை முன்னேற்ற வந்தவரா இவர்?

இவர் மக்களுக்குத்தான் நன்மை செய்யவேண்டும். அதைவிடுத்து மத்திய அரசுக்கு வேலை செய்யக் கூடாது. மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்துவதையே இவர் செய்கிறார். கேட்காமலேயே திட்டங்களை கொடுக்கும் எங்களுக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், அரசு செயலாளர் அன்பரசு ஆகியோருக்கு நெல், கரும்பு, எள், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட தானிய மாலை அணிவிக்கப்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News