செய்திகள்
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு- ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கு ஐகோர்ட் மறுத்துவிட்டது.
சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக அளித்த புகாரில், திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்படடார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்ததுடன், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.