தொழில்நுட்பம்
பயனர் பாதுகாப்பிற்காக புதிய முயற்சி எடுக்கும் டிக்டாக்
டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலியை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்கிறது. #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த செயலி கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரில் மீண்டும் கிடைக்கிறது. தடை விதிக்கப்பட்டு சிக்கலுக்கு ஆளான டிக்டாக் இம்முறை ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு அக்கவுண்ட் பாதுகாப்பு பற்றிய விவரங்களை வழங்க செயலியில் வினாவிடை போன்ற அம்சத்தை செயல்படுத்துகிறது. ஏற்கனவே இதேபோன்ற வினாவிடை அம்சம் ஐரோப்பா முழுக்க வழங்கப்படுகிறது. தற்சமயம் ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவில் #SafeHumSafeInternet எனும் திட்டத்தை துவங்கி முதன்முறையாக வினாவிடை அம்சத்தை பயனர்களுக்கு வழங்கியது. இந்த அம்சம் வெற்றி பெற்றதாக அறிவித்த டிக்டாக் சுமார் 50 லட்சம் பயனர்கள் பாதுகாப்பு பற்றிய தங்களது பொது அறிவை தெரிந்து கொள்ள முயற்சித்ததாக தெரிவித்தது.
கல்வி சார்ந்த புதிய அம்சங்கள் மட்டுமின்றி டிக்டாக் செயலியில் புதிதாக அம்சங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் செயலியினுள் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்ச் மாதம் டிக்டாக் இந்தியாவுக்கென பிரத்யேக பாதுகாப்பு மையத்தை துவங்கியது. இதன் மூலம் பயனர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த விவரங்களை வழங்குகிறது.
புதிய பாதுகாப்பு அம்சம் இந்தியாவின் முக்கிய மொழிகளில் கிடைக்கிறது. இத்துடன் டிக்டாக் செயலியில் நோட்டிஃபிகேஷன் டேப் மாற்றியமைக்கப்பட்டு புதய கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது லாக்-இன் சாதனங்களை இயக்க முடியும். இதனால் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்படுவதை தவிர்க்க முடியும்.