உள்ளூர் செய்திகள்
மின்சார ரெயில்

மின்சார ரெயில்களில் 8 ஆயிரம் பேர் பயணம் செய்ய அனுமதி மறுப்பு

Published On 2022-01-13 06:14 GMT   |   Update On 2022-01-13 06:14 GMT
கடந்த 2 நாட்களாக மின்சார ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் ஆய்வு மேற்கொண்ட போது சிலரிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருவதால் மின்சார ரெயில்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் பரிசோதனை செய்யும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லை என்றால் பயணிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மின்சார ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் ஆய்வு மேற்கொண்ட போது சிலரிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. 2 நாட்களில் 8 ஆயிரம் பேர் சிக்கியதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வந்த 8 ஆயிரம் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முக கவசம் அணியாமல் ரெயில் நிலையங்களில் இருந்தவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கொரோனா விதிகளை மீறியதாக பயணிகளிடம் இருந்து கடந்த 2 நாட்களில் ரூ.52 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. எனவே மின்சார ரெயில்களில் பயணம் செய்யக் கூடியவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

ரெயில் நிலையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News