செய்திகள்
மகாராஷ்டிராவில் மீட்பு படகு கவிழ்ந்தது- 9 பேர் பலி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் மீட்பு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1.32 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தொடர்பான விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாங்லி மாவட்டத்தில் இன்று மீட்பு படகு விபத்துக்குள்ளானது. கிருஷ்ணா நதிக்கரையோரம் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்த மக்களை மீட்டு தனியார் படகில் அழைத்து வந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது.
படகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் சுமார் 15 பேர் நீந்தி உயிர்பிழைத்தனர். 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். காணாமல் போன மேலும் சிலரை போலீசாரும் பேரிடர் மீட்பு படையினரும் தேடி வருகின்றனர். ஏற்கனவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணியின்போது நடந்த இந்த விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.