செய்திகள்
கொள்ளை

மரக்காணம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.11 லட்சம் நகை கொள்ளை

Published On 2021-02-21 10:54 GMT   |   Update On 2021-02-21 10:54 GMT
மரக்காணம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் குமார் (வயது 32). இவர் அதே கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் குமாரின் 2 வயது குழந்தை சிவகார்த்திக்கிற்கு நேற்று முன்தினம் மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் தனது மனைவி சுமதி மற்றும் குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை முடிந்ததும் குமார் தனது மனைவி, குழந்தையுடன் நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு பூட்டும் மற்றும் நுழைவுவாயில் மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 34 பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி உடனடியாக குமார், மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News