செய்திகள்
கோப்புபடம்

விபத்தில் மனநலம் பாதிப்பு: தாயை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர்

Published On 2021-09-15 10:55 GMT   |   Update On 2021-09-15 10:55 GMT
கும்பகோணம் அருகே விபத்தில் மனநலம் பாதித்த வாலிபர் தாயை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அண்ணலக்ரகாரம் ரம்யா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரது மகன் பழனி (வயது 28). இவருக்கு 5 சகோதரிகள் மற்றும் ஒரு அண்ணன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி நிலையில் பழனிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தந்தை கடந்த மாதம் இறந்து விட்டார். தாய் சரஸ்வதியும், பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட பழனி, தாயுடன் தேவையில்லாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சரஸ்வதியுடன் தகராறில் ஈடுபட்ட பழனி ஆத்திரத்தில் தாயின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு ஏதும் நடக்காததுபோல் வீட்டிலேயே படுத்து தூங்கியுள்ளார். பின்னர் இன்று காலை அருகில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று தாயை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் கும்பகோணம் டி.எஸ்.பி. அசோகன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரஸ்வதியின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பழனியை கைது செய்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெற்ற தாயை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News