ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அருள்முருகன் (வயது 37). இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது மேலே சென்று கொண்டு இருந்த மின்சார வயர் அவர் மீது உரசியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அருள்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் மகன் தாமோதர கண்ணன் (17). மைக்செட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டுக்கு அருகே வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவம் குறித்தும் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் ஒரே நாளில் 2 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.